திருச்சி மண்டல ரயில்வே அலுவலகத்தின் புதிய நுழைவு வாயிலுக்கு "கர்த்தவ்ய துவார்" என இந்தி மொழியில் பெயரிடப்பட்ட விவகாரம் தமிழக அரசியலில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட வேண்டிய பெயரானது, வெறும் உச்சரிப்பு மாற்றத்துடன் இந்தியிலேயே எழுதப்பட்டிருப்பதைக் கண்டு ஆத்திரமடைந்த திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர், அந்தப் பெயர்களைக் கருப்பு மை கொண்டு அழித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பல்வேறு அரசியல் தலைவர்களும் இதற்குத் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வரும் நிலையில், தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இது குறித்து முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மத்திய அரசின் நிறுவனங்களில் தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி என மும்மொழிக் கொள்கை பின்பற்றப்பட வேண்டிய நிலையில், இந்த நுழைவு வாயிலில் தமிழின் இடம் புறக்கணிக்கப்பட்டு இந்திச் சொல்லே திணிக்கப்பட்டிருப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி உலக மேடைகளிலும், சமீபத்தில் மலேசியப் பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் இருக்கை அமைப்பதற்கான ஒப்பந்தத்திலும் தமிழுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை நினைவுகூர்ந்த எடப்பாடி பழனிசாமி, இத்தகைய செயல்கள் மத்திய அரசு தமிழின் மீது கொண்டுள்ள நன்மதிப்பைக் குறைக்கும் வகையில் அமைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, ரயில்வே நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு அந்த நுழைவு வாயிலுக்குத் தூய தமிழில் பெயர் சூட்ட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். மக்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து, சர்ச்சைக்குரிய அந்த ஹிந்திப் பெயரை அகற்ற ரயில்வே அதிகாரிகள் தற்போது ஒப்புக் கொண்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
