தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்க வசதியாக தமிழகம் முழுவதும்11,323 சிறப்பு பேருந்துகள் நாளை வரை இயக்கப்படுவதாக தமிழக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
முதல் நாளிலேயே இந்த ஏற்பாடுகள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. சென்னையிலிருந்து மட்டும் இதுவரை 1,88,705 பேர் அரசு பேருந்துகள் மூலம் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளனர். மேலும் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், தேவைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
தனியார் ஆம்னி பேருந்து
ஜனநாயகக் கடமையை நிறைவேற்றும் நோக்கில், பெருநகரங்களில் வசிக்கும் மக்கள் தங்கள் ஊர்களுக்கு திரளாகச் செல்லும் நிலையில், தனியார் ஆம்னி பேருந்துகளில் கட்டண உயர்வு கடுமையாக இருப்பது பயணிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. குறிப்பாக, சென்னையிலிருந்து மதுரை செல்லும் டிக்கெட் கட்டணம் வழக்கத்தை விட மூன்று மடங்கு அதிகரித்து ரூ.3, 500 வரை உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிறப்பு ரயில்கள்
ரயில் பயணிகளின் வசதிக்காகவும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. சென்னை எழும்பூர் நிலையத்திலிருந்து இன்று நாகர்கோவிலுக்கு மதியம் 1:25 மணிக்கு, மதுரைக்கு இரவு 9:55 மணிக்கு, கோவை மற்றும் போத்தனூருக்கு இரவு 11:55 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
பெரிய அளவில் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்லும் இந்த சூழலில், போக்குவரத்து சேவைகள் மேலும் அதிகரிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தேர்தல் நாளை முன்னிட்டு மாநிலம் முழுவதும் போக்குவரத்து வசதிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
