சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் கடந்த பிப்ரவரி மாதம் இரண்டாம் வாரத்தில் இருந்து 10 மற்றும் 11-ஆவது பிளாட்பார்ம்களில் தண்டவாளப் பராமரிப்பு மற்றும் மறுசீரமைப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. இந்தப் பணிகள் காரணமாக, எழும்பூரிலிருந்து தாம்பரம், செங்கல்பட்டு மற்றும் கூடுவாஞ்சேரி ஆகிய பகுதிகளுக்கு இயக்கப்படும் மின்சார ரயில்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைக்கப்பட்டது. மாற்று ஏற்பாடாக 5 மற்றும் 6-ஆவது பிளாட்பார்ம்களில் இருந்து குறைந்த அளவிலான ரயில்களே இயக்கப்பட்டதால், அலுவலகம் செல்வோரும் மாணவர்களும் கடும் அவதிக்குள்ளாகினர். கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்ட போதிலும், பயண நேரம் அதிகரித்ததால் பயணிகள் பெரும் சிரமத்தைச் சந்தித்து வந்தனர்.
திட்டமிட்டபடி ஏப்ரல் 4-ஆம் தேதி பணிகள் முடியும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒரு நாள் முன்னதாகவே அதாவது இன்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 3) அனைத்துப் பணிகளும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன. இதனையடுது, சென்னை கடற்கரை - தாம்பரம், செங்கல்பட்டு மற்றும் அரக்கோணம் ஆகிய வழித்தடங்களில் ரத்து செய்யப்பட்டிருந்த அனைத்து மின்சார ரயில்களும் இன்று முதல் தடையின்றி இயங்கத் தொடங்கியுள்ளன. மேலும், பராமரிப்புப் பணிகளுக்காகப் பகுதி அளவில் ரத்து செய்யப்பட்டிருந்த 44-க்கும் மேற்பட்ட விரைவு ரயில்களும் இனி பழையபடி எழும்பூர் ரயில் நிலையம் வரை வந்து செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தின் மிக முக்கிய ரயில் நிலையமான எழும்பூரில் இயல்பு நிலை திரும்பியுள்ளதால், பயணிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
