நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் தெருவில் விளையாடிக்கொண்டிருந்த ஏழு வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. உலக மகளிர் தினமான இன்று இத்தகைய துயரமான செய்தி வெளியாகியிருப்பது வேதனையளிப்பதாகக் கூறியுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இந்த விவகாரத்தில் திமுக அரசை கடுமையாகச் சாடியுள்ளார். ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் நிர்வாகச் சீர்கேடு மலிந்துவிட்டதால், சிறுமிகள் முதல் முதியவர்கள் வரை யாருக்குமே பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். தெருவில் விளையாடும் ஒரு குழந்தைக்குக் கூட பாதுகாப்பு வழங்க முடியாத நிலையில், 'வெல்லும் தமிழ்ப் பெண்கள்' என விளம்பரம் செய்வது தேவையா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், இத்தகைய குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது தயவுதாட்சண்யமின்றி மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், அக்குழந்தைக்கு உயர்தர மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் தனது எக்ஸ் (X) தளப் பதிவில் கேட்டுக்கொண்டுள்ளார். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் சூழலில், மக்கள் மீண்டும் இந்த ஆட்சிக்கு வாய்ப்பு வழங்குவார்களா என்று வினவியுள்ள அவர், தமிழக அரசின் மெத்தனப் போக்கே இத்தகைய சம்பவங்களுக்குக் காரணம் எனத் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
