தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டதாகவும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாகவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மிகக்கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். தனது சமூக வலைதளப் பக்கத்தில் இது குறித்துப் பதிவிட்டுள்ள அவர், கடந்த சில நாட்களாகத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அரங்கேறியுள்ள தொடர் கொலைகள் மற்றும் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களைப் பட்டியலிட்டுள்ளார். கிருஷ்ணகிரி, சென்னை திரிசூலம் மற்றும் தென்காசி மாவட்டங்களில் நிகழ்ந்த கொடூரமான குற்றச் சம்பவங்கள் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முதியோர்களுக்கும் விவசாயிகளுக்கும் கூடத் தங்களது வீடுகளில் பாதுகாப்பு இல்லாத ஒரு கொடூரமான நிலை உருவாகியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள எடப்பாடி பழனிசாமி, இதற்கெல்லாம் பொறுப்பேற்க வேண்டிய முதலமைச்சர் கடந்த ஐந்து ஆண்டுகளில் சட்டம்-ஒழுங்கு குறித்து ஒருமுறையாவது வாய் திறந்து பேசியுள்ளாரா என்று கேள்வி எழுப்பியுள்ளார். "உங்கள் ஆட்சியில் அங்கொன்றும் இங்கொன்றுமாக கொலைகள் நடக்கவில்லை; எங்கும் கொலை, எப்போதும் கொலைதான் நடக்கிறது" என்று சாடியுள்ள அவர், திமுக அரசு தனது கடைசி நாட்களை எண்ணிக்கொண்டிருப்பதாகவும், எஞ்சியுள்ள நாட்களிலாவது மக்களின் உயிரைப் பாதுகாக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். குற்றவாளிகள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கத் தவறிய 'பொம்மை முதல்வர்' பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர் என்றும் அவர் தனது பதிவில் காரசாரமாகத் தெரிவித்துள்ளார்.
