தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீட்டில் நிலவி வந்த நீண்டகாலக் குழப்பங்களுக்கு இன்று தீர்வு காணும் வகையில் முக்கிய நகர்வு ஏற்பட்டுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை, காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் நேரில் சந்தித்துப் பேசினர். சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்த ஆலோசனையில் திமுக எம்.பி. கனிமொழியும் பங்கேற்றார். 36 தொகுதிகள் மற்றும் 2 ராஜ்யசபா இடங்கள் வேண்டும் என்ற காங்கிரஸின் பிடிவாதத்தால் முடங்கிக் கிடந்த பேச்சுவார்த்தையில், தற்போது ஒரு சுமுகமான உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
ராகுலின் முடிவு
ஆரம்பத்தில் 25 இடங்களை மட்டுமே வழங்க முன்வந்த திமுக, இன்றைய ஆலோசனையின் முடிவில் 29 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் 2 ராஜ்யசபா இடங்களை வழங்க ஒப்புக்கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தை குறித்து ப.சிதம்பரம் நேரடியாக ராகுல் காந்தியிடம் விவரிப்பார் என்றும், டெல்லியில் இருந்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்றும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்துப் பேசிய திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன், காங்கிரஸ் தனது பழைய நிலைப்பாட்டில் இருந்து இறங்கி வந்துள்ளதாகவும், இன்று மாலைக்குள் ஒரு 'நல்ல செய்தி' வெளியாகும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தவெக பக்கம் செல்ல வேண்டாம்
முன்னதாக, காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்கள் நடத்திய ஆலோசனையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைப்பது குறித்த விவாதமும் எழுந்தது. ஆனால், விஜய்யின் வாக்கு வங்கி இன்னும் நிரூபிக்கப்படாத சூழலில், அவருடன் கைகோர்ப்பது சரியாக இருக்காது எனப் பெரும்பாலான காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். திமுக கூட்டணியை விட்டு வெளியேறுவது தமிழகத்தில் பாஜக பலமடைய வழிவகுக்கும் என்பதால், சில இடங்களை விட்டுக் கொடுத்தாவது திமுக கூட்டணியிலேயே நீடிப்பதுதான் அரசியல் ரீதியாகச் சரியான முடிவாக இருக்கும் என அவர்கள் மேலிடத்திற்கு அழுத்தம் கொடுத்துள்ளனர்.
