தஞ்சாவூரில் இன்று நடைபெற்ற பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் சகோதரி இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டு பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் கட்சியுடனான மாநிலங்களவை தேர்தல் கூட்டணி ஒப்பந்தம் மிகவும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாகத் தெரிவித்தார். இந்த உடன்பாடு அனைவரும் பாராட்டும் வகையில் அமைந்திருப்பதாகவும், அதனை முடித்துவிட்டே இந்தத் திருமண விழாவிற்கு வந்துள்ளதாகவும் அவர் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
முன்னதாக, வேட்புமனுத் தாக்கலை உறுதி செய்தபின் காரில் ஏறியபோது தாம் காட்டிய சைகை தற்செயலாக நடந்தது என்றும், செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாகவே அது அமைந்தது என்றும் அவர் விளக்கம் அளித்தார். மாநிலங்களவை தேர்தலில் திமுக சார்பில் இரண்டு இடங்களிலும், கூட்டணிக் கட்சிகளுக்கு இரண்டு இடங்களையும் ஒதுக்கியுள்ளதை அவர் உறுதிப்படுத்தினார்.
மேலும், அன்பில் தர்மலிங்கம் காலம் முதல் தற்போது உதயநிதி - மகேஸ் காலம் வரை தங்களது குடும்ப நட்பு வாழையடி வாழையாகத் தொடர்வதைக் குறிப்பிட்ட முதல்வர், அமைச்சர் அன்பில் மகேஸின் சிறப்பான செயல்பாடுகளை வெகுவாகப் பாராட்டினார். சட்டமன்றத்திலும் பொது மேடைகளிலும் புள்ளிவிவரங்களுடன் கணினி போலப் பேசும் மகேஸின் ஆற்றலை அனைவரும் புகழும்போது, அவரது தந்தையின் இடத்தில் இருந்து தாம் பெருமிதம் கொள்வதாக நெகிழ்ச்சியுடன் பேசினார்.
