கடந்த சில மாதங்களுக்கு முன்பு, புதுச்சேரி எல்லையில் காட்டு மயிலூரைச் சேர்ந்த வல்லரசு என்பவரிடமிருந்து 1.68 லிட்டர் மதுபானத்தைக் கடலூர் மதுவிலக்கு போலீஸார் பறிமுதல் செய்து வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்த வல்லரசு தரப்பு, 2017-ம் ஆண்டு தமிழக அரசு பிறப்பித்த அரசாணையின்படி, ஒரு தனிநபர் தனது சொந்தத் தேவைக்காக 4.5 லிட்டர் வரை மதுபானம் வைத்திருக்க அனுமதியுள்ளதாக வாதிட்டது. இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி எம். நிர்மல்குமார், அவர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
மதுவிலக்கு பிரிவின் மேல்முறையீடும் எச்சரிக்கையும்
இந்நிலையில், இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ள கடலூர் மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸார், மதுபான வரம்பு குறித்த முக்கிய விளக்கத்தை அளித்துள்ளனர். தமிழக அரசின் 4.5 லிட்டர் மதுபான அனுமதி என்பது, டாஸ்மாக் கடைகளில் முறையாக விற்கப்படும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பிராண்டுகளுக்கு மட்டுமே பொருந்தும். அண்டை மாநில மதுபானங்கள் அல்லது தமிழக அரசால் அங்கீகரிக்கப்படாத பிராண்டுகளை 90 மிலி அளவில் கொண்டு வந்தாலும் அது தமிழ்நாடு மதுவிலக்கு சட்டத்தின் கீழ் குற்றமாகவே கருதப்படும். எனவே, புதுச்சேரியில் இருந்து சிறிதளவு மதுபானம் கொண்டு வந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனப் போலீஸார் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.
