தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் களம் அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. சமீபத்தில் தமிழக அரசு 1.31 கோடி குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்கில் மகளிர் உரிமைத் தொகையாக 5,000 ரூபாயை முன்பணமாக வரவு வைத்தது. இந்த நடவடிக்கை பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், "அதிமுக கொடுத்த அழுத்தத்தால் தான் இந்தத் தொகையை திமுக அரசு வழங்கியுள்ளது" என்று எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்தார்.
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது 'எக்ஸ்' பக்கத்தில் காட்டமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "பழனிசாமி அவர்களே, உங்கள் அழுத்தம் காரணமல்ல; தேர்தலைக் காரணம் காட்டி உங்களது டெல்லி எஜமானர்கள் இந்தத் தொகையைத் தடுத்து நிறுத்திவிடுவார்கள் என்ற சூழ்ச்சியை முறியடிக்கவே பணத்தை முன்கூட்டியே வழங்கியுள்ளேன்," என்று விளக்கம் அளித்துள்ளார்.
மேலும், அதிமுகவின் இந்த உரிமை கொண்டாட்டத்தைப் பார்த்தால், திமுகவின் 'திராவிட மாடல்' அரசு நடத்திய 'சர்ஜிக்கல் ஸ்டிரைக்' எதிர்க்கட்சியினரின் தூக்கத்தைக் கெடுத்துள்ளதை உணர முடிகிறது என்றும், அதிமுகவின் 'காப்பி-பேஸ்ட்' அரசியல் ஊரறிந்த ரகசியம் என்பதால் புதிதாக எதையாவது சொல்லுங்கள் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கிண்டலாகச் சாடியுள்ளார்.
