கோயம்புத்தூர் மாவட்டம் கவுண்டபாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. நேற்று (மார்ச் 10) இந்தப் பள்ளியில் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. உணவைச் சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே மாணவ, மாணவிகள் அடுத்தடுத்து வாந்தி எடுத்து மயங்கி விழுந்தனர். இந்தத் திடீர் உடல்நலக் குறைவு பள்ளியில் பெரும் பதற்றத்தை உருவாக்கியது.
உணவில் பல்லி கண்டெடுப்பு
தகவல் அறிந்து விரைந்து வந்த சுகாதாரத்துறை அதிகாரிகள், மாணவர்கள் சாப்பிட்ட உணவை ஆய்வு செய்தனர். அப்போது அதிர்ச்சியூட்டும் வகையில், சமைக்கப்பட்ட உணவில் பல்லி ஒன்று இறந்து கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட 30 மாணவர்கள் மற்றும் 13 மாணவிகள் என மொத்தம் 43 பேரையும் ஆசிரியர்கள் ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 5 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர் அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
மாநகராட்சி ஆணையரின் நடவடிக்கை
இந்தச் சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், உணவில் பல்லி விழுந்ததாகக் கூறப்படும் புகார் குறித்து விசாரணை நடத்தத் தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இது பணியாளர்களின் கவனக்குறைவால் நடந்ததா என்பது விசாரணையின் முடிவில் தெரியவரும் என்றும், இனி இதுபோன்ற தவறுகள் நடக்காமல் இருக்க அனைத்துப் பள்ளிகளுக்கும் உரிய சுற்றறிக்கை அனுப்பப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்.
