தமிழகத்தின் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு சார்ந்த கட்டிடங்களில் முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் புகைப்படத்தை வைப்பது இனி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாகத் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், தமிழக அரசின் கீழ் இயங்கும் அனைத்து பொதுத்துறை நிறுவனங்கள், தன்னாட்சி அமைப்புகள் மற்றும் ஏனைய அரசு அலுவலகங்களில் முதல்வரின் அங்கீகரிக்கப்பட்ட புகைப்படத்தை உரிய முறையில் காட்சிப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் நிர்வாக ரீதியாக முதல்வர் விஜய்யின் படம் அதிகாரப்பூர்வ அடையாளமாக அனைத்துத் துறைகளிலும் இடம்பெற உள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட புகைப்பட வெளியீடு
அரசு அலுவலகங்களில் எந்த மாதிரியான புகைப்படத்தைப் பயன்படுத்த வேண்டும் என்பதில் குழப்பம் ஏற்படாமல் இருக்க, முதல்வரின் ‘அங்கீகரிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ புகைப்படத்தை’ செய்தித்துறை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அதிகாரப்பூர்வப் புகைப்படம் அனைத்து அரசுத் துறைகளுக்கும் முறைப்படி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முதல் சிறிய அளவிலான அரசு அலுவலகங்கள் வரை இந்தப் புகைப்படத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. முதல்வராகப் பொறுப்பேற்ற பின் நிர்வாக ரீதியாக எடுக்கப்பட்டுள்ள முக்கிய நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.
