திருச்சிக்கு முதல்வர் விஜய் நாளை செல்ல உள்ள நிலையில் அங்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நன்றி தெரிவிக்க செல்லும் விஜய்
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் விஜயின் தமிழக வெற்றி கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. கடந்த மே பத்தாம் தேதி விஜய் முதலமைச்சராக பதவியேற்ற நிலையில் அவர் இந்த தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தேர்தல் ஆணைய விதிகளின்படி ஏதேனும் ஒரு தொகுதியில் மட்டுமே சட்டமன்ற உறுப்பினராக தொடர முடியும் என்ற நிலையில் பதவியேற்ற அடுத்த சில மணி நேரங்களில் திருச்சி கிழக்கு தொகுதியில் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.
இந்த சூழலில் அமைச்சரவை விரிவாக்கம், பல்துறை அதிகாரிகளுடன் சந்திப்பு, அனைத்து துறை அதிகாரிகள் இடமாற்றம் என தொடர்ச்சியாக பிசியாக இயங்கி வந்த விஜய் தான் வெற்றி பெற்ற தொகுதிகளில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க செல்லவில்லை என எதிர்க்கட்சியான திமுக சரமாரியாக குற்றம் சாட்டியது.
முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
இந்த சூழலில் முதலமைச்சர் விஜய் திருச்சி கிழக்கு தொகுதியில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்க நாளை செல்ல உள்ளார். இதற்கான முன்னேற்பாடு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அதே சமயம் திருச்சியில் முதல்வர் வருகையை முன்னிட்டு நாளை ஒருநாள் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சியானது புனித ஜோசப் கல்லூரி மைதானத்தில் நடைபெறுகிறது. விமான நிலையத்திலிருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் அந்த கல்லூரிக்கு செல்லும் வழியில் பொதுமக்கள் முதலமைச்சர் விஜய்க்கு வரவேற்பு அளிக்க உள்ளனர்.
மாலை 4 மணி அளவில் மக்கள் சந்திப்பு நடக்க உள்ள நிலையில் தேர்தலுக்குப் பிறகு முதலமைச்சர் விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சி என்பதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
வெடிகுண்டு மிரட்டல் அதிகாரிகள் சோதனை
இந்த சூழலில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதே சமயம் திருச்சி மாவட்டம் முழுவதும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது
