தமிழக சட்டப்பேரவையின் சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்தல் இன்று நடைபெற்றது. இதில், தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த ஆயிரம் விளக்கு தொகுதி எம்எல்ஏ ஜே.சி.டி. பிரபாகர் போட்டியின்றி சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார்.
சட்டப்பேரவை மரபின்படி, அவை முன்னவர் செங்கோட்டையன் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர், புதிதாக தேர்வு செய்யப்பட்ட சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரை சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் விஜய், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் சபாநாயகருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், “சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், முதலமைச்சர் விஜய் மற்றும் நானும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள். கல்லூரியில் முதலமைச்சர் எனக்கு சீனியர். ஆனால் அரசியலில் திமுக தான் சீனியர். 1967ஆம் ஆண்டு முதல் திமுக அரசியல் அனுபவத்துடன் செயல்பட்டு வருகிறது. அதனால் எங்களின் அறிவையும் அனுபவத்தையும் பகிர்ந்து கொள்ள தயாராக இருக்கிறோம். அதை ஏற்றுக்கொள்ள நீங்களும் தயாராக இருக்க வேண்டும்,” என்று நகைச்சுவையுடன் பேசினார்.
மேலும், முந்தைய சட்டப்பேரவைகளில் ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே உறுப்பினர் எண்ணிக்கையில் பெரிய வித்தியாசம் இருக்கும். ஆனால் இந்த முறை எதிர்க்கட்சியிலும் கணிசமான உறுப்பினர்கள் இருப்பது பேரவையின் சிறப்பாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
