மத்திய பாஜக அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ள தொகுதி மறுவரையறை திருத்த மசோதாவிற்குத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இந்தியாவின் வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் பாடுபட்டதற்காகத் தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களுக்கு இந்த மசோதா மூலம் மத்திய அரசு தண்டனை வழங்குகிறதா என்று கேள்வி எழுப்பியுள்ளார். மத்திய அரசு கொண்டு வரவுள்ள இந்தச் சட்டத் திருத்தம் தென்மாநிலங்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் வரலாற்று அநீதி என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
தமிழகம் தழுவிய கருப்புக் கொடி போராட்டம்
விந்திய மலைக்குத் தெற்கே வசிக்கும் தென்னிந்திய மக்கள் ஒவ்வொருவரும் இந்த விவகாரத்தில் மிகுந்த கொதிப்பில் இருப்பதாகவும், பாஜக அரசு நெருப்போடு விளையாடுவதாகவும் முதலமைச்சர் எச்சரித்துள்ளார். இந்த அநீதியைக் கண்டிக்கும் வகையில், நாளை (ஏப்ரல் 16) தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் தங்கள் வீடுகளிலும், பொது இடங்களிலும் கருப்புக் கொடி ஏற்றிப் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மத்திய அரசுக்கு விடுக்கப்பட்ட இறுதி எச்சரிக்கை
தமிழகத்தின் நியாயமான குரலை மதித்து மத்திய அரசு இந்த முடிவிலிருந்து பின்வாங்கவில்லை என்றால், அதற்கான மோசமான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று முதலமைச்சர் எச்சரித்துள்ளார். இதற்காக மத்திய அரசு மிகப்பெரிய விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும் என்று குறிப்பிட்ட அவர், திமுக தலைவராகவும், சுயமரியாதையுள்ள தமிழனாகவும் மத்திய அரசுக்கு மீண்டும் ஒருமுறை எச்சரிக்கை விடுப்பதாகத் தனது பதிவில் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
