தமிழக அரசியலில் தேர்தல் மற்றும் அரசுப் பணிகள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பிஸியாக இருக்கும் வேளையில், சமூக வலைதளங்களில் புகழ்பெற்ற சிறுவர்களான தேவா மற்றும் ஜீவா ஆகியோரைத் தனது அலுவலகத்திற்கு அழைத்துச் சந்தித்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். அரசுப் பள்ளியில் பயிலும் இந்தச் சகோதரர்களின் 'ரீல்ஸ்' வீடியோக்கள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், அவர்களை நேரில் பாராட்டி உற்சாகப்படுத்த வேண்டும் என்பதற்காகவே இந்தச் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்திருந்தார் முதல்வர். இந்த நிகழ்வின் போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸும் உடனிருந்தார். சிறுவர்களின் குடும்பத்தினரையும் சந்தித்த முதல்வர், அவர்களின் பின்னணி மற்றும் வீடியோ உருவாக்கம் குறித்து ஆர்வத்துடன் கேட்டறிந்தார்.
இந்தச் சந்திப்பையே ஒரு அழகான வீடியோ கன்டென்டாக மாற்றிய சிறுவன் தேவா, "நான் உங்க தேவா... நம்மோடு சிஎம் சார் இணைந்துள்ளார். அவர் சொல்லும் அட்வைஸை எல்லாரும் கேட்பீங்க" எனத் தனது பாணியிலேயே அறிமுகம் கொடுத்தார். இதனை ரசித்த முதல்வர் ஸ்டாலின், "உங்களின் வீடியோக்கள் மிகவும் நன்றாக உள்ளன, அதற்கு எனது வாழ்த்துகள். அதே சமயம் படிப்பிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும்" என அன்பு கலந்த அறிவுரையை வழங்கினார். மேலும், அந்தச் சிறுவர்கள் எதிர்காலத்தில் ஆட்சியராகவும், காவல் அதிகாரியாகவும் ஆக வேண்டும் என்ற தங்களது கனவைத் தெரிவித்தபோது, "உங்கள் கனவுகள் நிச்சயம் நிறைவேற வேண்டும்" என முதல்வர் மனதார வாழ்த்தினார். அரசுப் பள்ளியில் வழங்கப்படும் காலை சிற்றுண்டி மற்றும் சத்துணவுத் திட்டம் குறித்து மாணவர்களிடம் நேரடியாகக் கேட்டறிந்த முதல்வர், அவர்களின் எதிர்காலத் திட்டங்களுக்குப் பக்கபலமாக இருப்பதாகவும் உறுதியளித்தார்.
