தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நிறைவடைந்துள்ள நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் ஓய்வெடுப்பதற்காக இன்று (ஏப்ரல் 25) திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு வருகை தருகிறார். ஐந்து நாட்கள் பயணமாகத் திட்டமிடப்பட்டுள்ள இந்த ஓய்வுக்காக, அவர் இன்று காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை சென்றடைந்து, அங்கிருந்து கார் வழியாக மலைகளின் இளவரசியான கொடைக்கானலைச் சென்றடைய உள்ளார்.
கொடைக்கானலில் 5 நாட்கள்
கொடைக்கானலில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் தனது குடும்பத்துடன் தங்கவுள்ள முதல்வர், வரும் ஏப்ரல் 29-ம் தேதி வரை அங்கேயே ஓய்வெடுக்கத் திட்டமிட்டுள்ளார். பின்னர் ஏப்ரல் 30-ம் தேதி அவர் மீண்டும் சென்னை திரும்புகிறார். கடந்த 2021-ல் சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் 2024-ல் மக்களவைத் தேர்தல் முடிவடைந்த பிறகும் முதல்வர் இதேபோல் கொடைக்கானலில் ஓய்வெடுத்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வந்துள்ள நிலையில், இது முழுக்க முழுக்க தனிப்பட்ட ஓய்வுப் பயணம் என்பதால், கட்சியினர் அல்லது நிர்வாகிகள் யாரும் முதல்வரைச் சந்திக்க அனுமதி இல்லை என்று திமுக வட்டாரங்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளன.
