மத்திய பாஜக அரசு அவசர அவசரமாகக் கூட்டியுள்ள நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடரில், தென்மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் வகையிலான தொகுதி மறுவரையறை சட்டத் திருத்தத்தைப் புகுத்த முயல்வதற்குத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிகக் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற மத்திய அரசின் அறிவுறுத்தலைச் சரியாகப் பின்பற்றியதற்காகத் தென்னிந்திய மாநிலங்களைத் தண்டிப்பது எந்த வகையில் நியாயம் எனக் கேள்வி எழுப்பியுள்ளார். இச்சட்டத் திருத்தம் குறித்து எந்த ஆலோசனையும் நடத்தாமல் ரகசியமாகச் செயல்படுவது பெரும் ஆபத்து இருப்பதை உறுதி செய்வதாகக் குறிப்பிட்டுள்ள அவர், பிரதமர் இது குறித்து எந்த உத்தரவாதமும் அளிக்காதது ஏன் எனவும் சாடியுள்ளார்.
தேர்தல் பரபரப்பில் இருக்கும் வேளையில், தங்களுக்குத் தெரியாமல் டெல்லியில் அமர்ந்து கொண்டு தமிழ்நாட்டின் உரிமைகளைப் பறித்துவிடலாம் என நினைக்க வேண்டாம் என்று முதல்வர் எச்சரித்துள்ளார். ஒருவேளை வடமாநிலங்களுக்குச் சாதகமாகத் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால், தமிழகம் இதுவரை கண்டிராத மிகப்பெரிய போராட்டத்தை எதிர்கொள்ள நேரிடும் என்றும், மாநிலம் முழுவதும் ஸ்தம்பிக்கும் வகையில் ஒவ்வொரு குடும்பமும் வீதிக்கு வந்து போராடும் என்றும் அவர் தெரிவித்தார். ஆட்சி அதிகாரத்தை விடச் சுயமரியாதையும் கொள்கையுமே முக்கியம் எனக் குறிப்பிட்ட அவர், 60-களில் இந்தி திணிப்புக்கு எதிராகப் போராடிய பழைய திமுகவை இந்தியா மீண்டும் பார்க்க வேண்டியிருக்கும் என அதிரடியாகத் தெரிவித்துள்ளார். அண்ணல் அம்பேத்கர் மீது ஆணையிட்டுச் சொல்கிறேன், இது தமிழகத்தின் இறுதி எச்சரிக்கை என்று பிரதமருக்கு நேரடியாக அவர் சவால் விடுத்துள்ளார்.
