நெல் சாகுபடிக்குத் தமிழக அரசு வழங்கும் ஊக்கத்தொகையை நிறுத்தச் சொல்லி மத்திய அரசு கடிதம் அனுப்பியதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டியிருந்தார். இதனை மறுத்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், முதல்வரின் பேச்சு விவசாயிகளைத் திசைதிருப்பும் செயல் என்றும், உண்மைக்குப் புறம்பானது என்றும் தெரிவித்திருந்தார். இதற்குப் பதிலடி கொடுத்துள்ள முதல்வர் ஸ்டாலின், மத்திய அமைச்சகம் அனுப்பிய கடிதத்தில் உள்ள விவரங்களைத் தவிர தான் எதையும் கூடுதலாகப் பேசவில்லை என்றும், தனது கூற்று உண்மை இல்லை என நிதியமைச்சர் கருதினால் அந்தக் கடிதத்தைப் பொதுவெளியில் வெளியிடத் தயாரா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
மாநில அரசு வழங்கும் ஊக்கத்தொகையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், அதனை நிறுத்துவது குறித்துச் சிந்திக்க வேண்டும் என்றும் தலைமைச் செயலாளருக்கு மத்திய அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளதாகச் சுட்டிக்காட்டிய முதல்வர், அரசியல் உள்நோக்கத்துடன் தான் பேச வேண்டிய அவசியம் இல்லை என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். குறைந்தபட்ச ஆதார விலையைத் தாண்டி ஊக்கத்தொகை வழங்குவது மாநில அரசின் உரிமை என்று நிதியமைச்சர் தற்போது கூறுவது உண்மையானால், அந்தக் கடிதத்தை மக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் என்பதே தனது சவால் என முதல்வர் தனது சமூக வலைதளப் பதிவில் பதிவிட்டுள்ளார்.
