அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு வேலூர், விருதம்பட்டு பகுதியில் உள்ள அவரது சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், "பெண்களின் முன்னேற்றத்தைக் கொண்டே ஒரு சமூகத்தின் வளர்ச்சியை அளவிட முடியும்" என்ற அம்பேத்கரின் பொன்மொழியை நினைவுகூர்ந்துள்ளார். நாட்டின் அரசியலமைப்பைப் பாதுகாக்கவும், சமூகநீதியை நிலைநாட்டவும், ஒடுக்கப்பட்டோரின் குரலாகத் திகழவும் நாம் அனைவரும் உறுதியேற்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்தியாவின் உண்மையான வலிமை என்பது அதன் பன்மைத்துவத்தில் தான் அடங்கியுள்ளதே தவிர, திணிக்கப்படும் ஒற்றைத்தன்மையில் இல்லை என முதல்வர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். உண்மையான முன்னேற்றத்தை அடைய வேண்டுமானால், ஏற்றத்தாழ்வுகளையும் ஒற்றைத்தன்மையையும் நிராகரித்துவிட்டு, சமத்துவத்தையும் பன்மைத்துவத்தையும் தேர்ந்தெடுத்து நீதியை நிலைநாட்டுவோம் என அவர் தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.
