சென்னை - தாம்பரம் இடையிலான ரயில் நிலைய மறுசீரமைப்புப் பணிகளால் தொடர்ந்து புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டு வருவது பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. லட்சக்கணக்கான பயணிகள் பயன்படுத்தும் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் முன்னறிவிப்பின்றி ரயில்கள் நிறுத்தப்படுவதால், அன்றாடப் பணிகளுக்குச் செல்வோர் முதல் மாணவர்கள் வரை அனைவரும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இது குறித்து வேதனை தெரிவித்துள்ள திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, ஏற்கனவே 40 ரயில்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், இன்றும் 49 ரயில்கள் நிறுத்தப்பட்டிருப்பது பொதுமக்களை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
தேர்வு நேர நெருக்கடி
குறிப்பாக, இன்னும் சிலவாரங்களில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்க உள்ள நிலையில், போக்குவரத்து முடக்கம் மாணவர்களின் தயாரிப்பை வெகுவாகப் பாதிக்கும் என்று கனிமொழி சுட்டிக்காட்டியுள்ளார். இக்கட்டான இந்தச் சூழலில் தென்னக ரயில்வே நிர்வாகம் மெத்தனமாகச் செயல்படாமல், போர்க்கால அடிப்படையில் இந்தப் பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ள திடீர் மாற்றங்களால் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெருக்கடியைச் சமாளிக்க மாற்று ஏற்பாடுகள் போதிய அளவில் இல்லாததே இத்தகைய பொதுமக்களின் வேதனைக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.
