சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் (MTC) நகரின் பொதுப் போக்குவரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில், அதிநவீன வசதிகள் கொண்ட 'பிரீமியம்' பேருந்து சேவையை இன்று (மார்ச் 11) அறிமுகப்படுத்தியுள்ளது. போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கரால் தொடங்கி வைக்கப்பட்ட இந்த புதிய திட்டம், குறிப்பாக அலுவலகப் பணியாளர்கள் மற்றும் ஐ.டி நிறுவன ஊழியர்களின் பயண அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தாழ்தளப் பேருந்துகள் மற்றும் மின்சாரப் பேருந்துகளை அறிமுகம் செய்துள்ள நிலையில், இந்த பிரீமியம் சேவை ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
இந்த பேருந்துகளின் சிறப்பம்சமே இதன் நவீன கட்டமைப்புதான். சொகுசு இருக்கைகள், இலவச இணைய வசதி (Wi-Fi) மற்றும் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் இவை இயக்கப்படுகின்றன. மேலும், இந்த பேருந்துகளில் நடத்துநர்கள் இருக்க மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பயணிகள் 'சென்னை ஒன்' (Channai One) செயலி மூலம் மட்டுமே தங்கள் இருக்கைகளை முன்கூட்டியே பதிவு செய்து டிஜிட்டல் முறையில் பயணிக்க முடியும். 'சென்னை ஒன்' செயலி வாயிலாகப் பொதுமக்களிடம் பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையிலேயே இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முதற்கட்டமாக, அதிக போக்குவரத்து நெரிசல் மற்றும் ஐ.டி ஊழியர்கள் நடமாட்டம் உள்ள கோயம்பேடு – சிறுசேரி (570S) மற்றும் கிளாம்பாக்கம் – திருவான்மியூர் (91) ஆகிய இரண்டு முக்கிய வழித்தடங்களில் இந்தப் பேருந்துகள் முன்னோட்டமாக இயக்கப்படுகின்றன. இந்தப் பயணத்திற்கான குறைந்தபட்ச கட்டணம் 50 ரூபாயாகவும், அதிகபட்ச கட்டணம் 150 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சாதாரண பேருந்துகளை விடக் கட்டணம் சற்று கூடுதலாக இருந்தாலும், இதிலுள்ள நவீன வசதிகள் பயணிகளுக்கு மிகுந்த மனநிறைவைத் தரும் என்று போக்குவரத்துத் துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது.
