சென்னை கடற்கரை முதல் வேளச்சேரி வரை இயக்கப்பட்டு வரும் பறக்கும் ரயில் திட்டத்தை பரங்கிமலை வரை நீட்டிக்கும் பணிகள் சுமார் 17 ஆண்டுகளுக்குப் பிறகு முழுமையாக நிறைவடைந்து, இன்று முதல் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கட்டுமானப் பணிகள் முடிந்த நிலையில், ரயில்வே பாதுகாப்பு தலைமை ஆணையர் ஜனக் குமார் கர்க் கடந்த மார்ச் 5-ம் தேதி இந்த 5 கி.மீ நீளமுள்ள புதிய தடத்தில் அதிவேக சோதனை ஓட்டம் நடத்தி ஆய்வு செய்தார். தொழில்நுட்ப ரீதியான சில கூடுதல் பணிகளை முடிக்க அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது இதற்கான தற்காலிக பாதுகாப்பு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, தெற்கு ரயில்வே இன்று முதல் இந்த வழித்தடத்தில் அதிகாரப்பூர்வமாக ரயில் சேவையைத் தொடங்கியுள்ளது.
புதிய அறிவிப்பின்படி, சென்னை கடற்கரை மற்றும் வேளச்சேரி இடையே இயக்கப்பட்ட 86 ரயில் சேவைகளும் இனி பரங்கிமலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் கடற்கரை - பரங்கிமலை இடையே தினமும் 86 ரயில்கள் இயக்கப்படும். இந்த வழித்தடத்தில் முதல் ரயில் காலை 5 மணிக்கும், கடைசி ரயில் இரவு 10.20 மணிக்கும் புறப்படும். வேளச்சேரி மற்றும் பரங்கிமலைக்கு இடையே புழுதிவாக்கம், ஆதம்பாக்கம் ஆகிய நிலையங்கள் இருந்தாலும், ஆதம்பாக்கம் ரயில் நிலையத்தில் கட்டுமானப் பணிகள் இன்னும் சில வாரங்களுக்குத் தொடர்வதால் அங்கு மட்டும் தற்போது ரயில்கள் நிற்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட நாள் கோரிக்கையான இந்த ரயில் இணைப்பு பயன்பாட்டுக்கு வந்ததையடுத்து, குடியிருப்போர் நலச் சங்கப் பிரதிநிதிகள் ரயில்வே அதிகாரிகளை நேரில் சந்தித்துத் தங்களது நன்றியைத் தெரிவித்துக் கொண்டதுடன், நிலையங்களைப் பராமரிக்கவும் வாகன நிறுத்துமிட வசதிகளை ஏற்படுத்தவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
