மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வரும் நாட்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் தாக்கத்தால் நாளை (மார்ச் 9) நீலகிரி மற்றும் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. இதனைத் தொடர்ந்து மார்ச் 10 முதல் 14-ஆம் தேதி வரையிலான நாட்களில் டெல்டா மாவட்டங்கள், தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் காரைக்காலில் லேசான தூறல் இருக்கும் என்றும், ஏனைய பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் சென்னையைப் பொறுத்தவரை நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் மிக லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெப்பநிலையைப் பொறுத்தவரை அதிகபட்சமாக 93 டிகிரி ஃபாரன்ஹீட் வரையிலும், குறைந்தபட்சமாக 75 டிகிரி ஃபாரன்ஹீட் வரையிலும் வெப்பம் நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
