சென்னை மாநகரப் போக்குவரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில், 100 குளிர்சாதன வசதி கொண்ட மின்சாரப் பேருந்துகள் உட்பட மொத்தம் 194 புதிய பேருந்துகளின் சேவையைத் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். உலக வங்கி மற்றும் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் நிதி பங்களிப்போடு, சுமார் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்தப் புதிய பேருந்துகள் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. குறிப்பாகப் பல்லவன் மத்திய பணிமனையில் அமைக்கப்பட்டுள்ள நவீன மின்சாரப் பேருந்து நிலையமும் இதன் மூலம் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. மாநகரப் பேருந்துகள் மட்டுமின்றி, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்காக 49 அதிநவீன சொகுசு பேருந்துகளையும் அவர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
பதக்கம் வென்ற மாற்றுத்திறனாளி வீரர்களுக்குக் கௌரவம்
பேருந்து சேவை தொடக்க விழாவைத் தொடர்ந்து, விளையாட்டுத் துறையிலும் தமிழக வீரர்களை ஊக்குவிக்கும் விதமாகத் துணை முதல்வர் முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டார். தேசிய அளவிலான பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றுத் தமிழகத்திற்குப் பெருமை சேர்த்த 29 மாற்றுத்திறனாளி வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு மொத்தம் 24 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிதியுதவி காசோலைகளை அவர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
