சென்னை பெசன்ட் நகர் கடற்கரை பகுதியில் இரண்டு நாட்களுக்கு முன்பு காரில் பேசிக்கொண்டிருந்த கல்லூரி மாணவ-மாணவியை, இருசக்கர வாகனத்தில் வந்த காவலர் ஒருவர் மிரட்டியுள்ளார். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்போவதாக அச்சமுறுத்திய அந்த நபர், வழக்கிலிருந்து தப்பிக்க ரூ.10,000 லஞ்சம் கேட்டுப் பேரம் பேசியுள்ளார். தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று மாணவன் கூறியும் விடாத அந்த காவலர், அவர்களைக் கட்டாயப்படுத்தி அருகில் உள்ள ஏடிஎம் மையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
மாணவியிடம் பாலியல் அத்துமீறல் மற்றும் வழிப்பறி
ஏடிஎம் மையத்திற்குச் சென்றதும், மாணவியைக் காரிலேயே இருக்கச் சொல்லிவிட்டு மாணவனை மட்டும் பணம் எடுக்க அனுப்பியுள்ளார். மாணவன் ரூ.8,000 பணத்துடன் திரும்பி வந்தபோது, காரினுள்ளே அந்த காவலர் மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுக்கொண்டிருந்ததைக் கண்டு உறைந்து போனார். மாணவன் சத்தமிடவே, அவரிடமிருந்த பணத்தைப் பிடுங்கிக்கொண்டு அந்த காவலர் தனது இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பியோடிவிட்டார்.
தனிப்பிரிவு உதவியாளர் ஜோசப் சிக்கியது எப்படி?
பாதிக்கப்பட்ட மாணவி இதுகுறித்து சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் துணிச்சலுடன் புகார் அளித்தார். அதன்பேரில் கொள்ளை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், இக்கொடூரச் செயலில் ஈடுபட்டவர் கொண்டித்தோப்பு போலீஸ் குடியிருப்பில் வசிக்கும் 35 வயதான ஜோசப் என்பது தெரியவந்தது. இவர் ஒரு உயர் போலீஸ் அதிகாரியின் தனிப்பிரிவில் உதவியாளராகப் பணியாற்றி வந்தவர். தலைமறைவாக இருந்த அவரை நேற்று கைது செய்த போலீசார், நீதிமன்றக் காவலுக்கு அனுப்பியதோடு அவரது கடந்தகால குற்றப்பின்னணி குறித்தும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
