தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையிலான விவாகரத்து வழக்கு தொடர்பான விசாரணை, செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. முன்னதாக, கடந்த பிப்ரவரி 24-ம் தேதி சங்கீதா தாக்கல் செய்த மனுவில், தனது கணவர் மற்றொரு நடிகையுடன் கொண்டுள்ள தொடர்பு குறித்தும், அது குறித்து விளக்கம் கேட்டும் சரியான பதில் கிடைக்காததால் பிரிந்து செல்ல விரும்புவதாகவும் குறிப்பிட்டிருந்தார். கடந்த பிப்ரவரி 26-ம் தேதி முதன்முதலில் விசாரணைக்கு வந்த இந்த வழக்கை, இன்றைய தினத்திற்கு (ஏப்ரல் 20) நீதிபதி ஒத்திவைத்திருந்தார். இன்றைய விசாரணையின் போது விஜய் மற்றும் சங்கீதா ஆகிய இருவரும் நேரில் முன்னிலையாக வேண்டும் என நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால், நேரில் வருவதற்குப் பதிலாக காணொலி காட்சி மூலம் ஆஜராக அனுமதி கோரி விஜய் தரப்பில் மனு அளிக்கப்பட்டிருந்தது.
விசாரணை ஒத்திவைப்பு மற்றும் ஊடகக் கட்டுப்பாடு
இன்று நடைபெற்ற நீதிமன்ற நடவடிக்கைகளில் விஜய் மற்றும் சங்கீதா இருவரும் நேரில் ஆஜராகவில்லை. அவர்களுக்குப் பதிலாக அவர்களின் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். அப்போது நீதிபதிகள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த வழக்கறிஞர்கள், வரும் ஜூன் மாதம் 15-ம் தேதி இருவரும் நேரில் ஆஜராவார்கள் என்று உறுதி அளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஜூன் 15-ம் தேதிக்கு ஒத்திவைத்தது. இதனிடையே, இது ஒரு குடும்பம் சார்ந்த தனிப்பட்ட விவகாரம் என்பதால், ஊடகங்கள் இது தொடர்பாக விவாதங்களை நடத்தக் கூடாது என்று விஜய் தரப்பில் ஒரு மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் விஜய் தனக்கு ஏதேனும் நெருக்கடி அளித்தால் சம்பந்தப்பட்ட நடிகையின் விவரங்களை வெளியிடப்போவதாக சங்கீதா தெரிவித்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், இந்த வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
