2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுகவைச் சேர்ந்த 4 எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளனர். இந்த நிலையில் இப்படி சிட்டிங் எம்எல்ஏக்கள் கட்சி மாறுவது என்பது எப்போது தொடங்கியது என்பது பற்றி காணலாம்.
கட்சி விட்டு கட்சி தாவும் நடைமுறை
பொதுவாக அரசியலில் கட்சி விட்டு கட்சித் தாவும் நடைமுறை என்பது சர்வசாதாரணமானது. காலையில் ஒரு கட்சியில் சேர்ந்து, மாலையில் அதிலிருந்து விலகி வேறொரு கட்சிக்கு சென்று, இரவு மூன்றாவதாக மற்றொரு கட்சியில் இணைந்த கதைகளை எல்லாம் கேட்டிருப்போம். பதவி, பணம், பொறுப்பு, கட்சிக்குள் கருத்து வேறுபாடு போன்றவை அடிப்படையில் இந்த கட்சி விட்டு கட்சி செல்லும் வழக்கம் இருந்து வருகிறது.
அந்த வகையில் 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மதுராந்தகம் எம்எல்ஏ மரகதம் குமரவேல், தாராபுரத்தில் போட்டியிட்டு வென்ற சத்யபாமா, பெருந்துறையில் வெற்றி பெற்ற ஜெயக்குமார், அம்பாசமுத்திரத்தில் வெற்றி பெற்ற இசக்கி சுப்பையா ஆகிய நான்கு பேரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.
இது தமிழ்நாடு அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. குதிரை பேரம் எனப்படும் பணப்பரிமாற்றம் நடைபெற்று இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளது. இதனை தவெக மறுத்துள்ளது.
பிள்ளையார் சுழி போட்டது திமுக
இந்த சூழலில் அரசியல் வரலாற்றை எடுத்துப் பார்த்தால் முதல் முதலாக சிட்டிங் எம்எல்ஏ தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு வேறு கட்சியில் இணைந்தது என்பது கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்றது.
அப்போது தமிழ்நாட்டில் திமுக ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதில் அதிமுக கூட்டணியில் வைகோவின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் இடம் பெற்றிருந்தது. அக்கட்சி சார்பில் போட்டியிட்டு கம்பம் தொகுதியில் என்.ராமகிருஷ்ணன் வெற்றி பெற்றிருந்தார். ஆனால் 2009 ஆம் ஆண்டு மதிமுக தலைமை தன் மீது சந்தேகம் கொள்வதாக கூறி எம்எல்ஏ பதவியை துறந்து பின்னர் திமுகவில் இணைந்தார்.
கம்பம் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலிலும் அவர் வெற்றி பெற்றார். இதே போல் அதிமுக சார்பில் 2006 சட்டமன்றத் தேர்தலில் திருச்செந்தூர் தொகுதியில், முந்தைய திமுக அரசின் அமைச்சராக இருந்த அனிதாஅ ஆர்.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்ற நிலையில் இவர் 2009 ஆம் ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்து திமுகவில் இணைந்தார். அதே ஆண்டில் நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார். இதன்பிறகு தமிழக அரசியலில் வேறு கட்சியில் இருக்கும் எம்எல்ஏக்கள் கட்சி விட்டு கட்சி தாவும் சம்பவமானது தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்த தேமுதிக
அப்படியாக பார்த்தால் 2011 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்து பெற்றது. ஆனால் சட்டப்பேரவையில் இரு கட்சிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட கூட்டணி முறிந்தது. இந்த சூழலில் தேமுதிகவில் இருந்து 8 எம்எல்ஏக்கள் வெளியேறி ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவிற்கு ஆதரவளிப்பதாக தெரிவிக்க, இதன் காரணமாக சட்டப்பேரவையில் தேமுதிக பலம் குறைந்து எதிர்க்கட்சி அந்தஸ்தை அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் இழந்தார்.
பதவியை ராஜினாமா செய்யாமல் ஒரு எம்.எல்.ஏ., கட்சி விட்டு கட்சி தாவுவதோ அல்லது ஆதரவு தெரிவிப்பதோ சட்டப்படி குற்றமாகும். அவர்கள் மீது கட்சித்தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்தால் பதவி பறிபோகும். அப்படித்தான் 2016 தேர்தலில் அதிமுகவில் இருந்து வெற்றி பெற்று பின்னர் அக்கட்சி பிளவுற்றபோது டிடிவி தினகரனுக்கு ஆதரவு கொடுத்த 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
