2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைப்பதற்கு எடப்பாடி பழனிசாமி தான் காரணம் என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
ஊடகம் ஒன்றில் பேசிய டாக்டர் கிருஷ்ணசாமியிடம், "தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் நடந்ததை நீங்கள் பார்த்திருப்பீர்கள். சி.வி.சண்முகம், புதிய தமிழகம் மற்றும் தேமுதிக போன்ற கட்சிகள் கூட்டணிக்கு வந்த போது அவற்றை எடப்பாடி பழனிசாமி உதாசீனப்படுத்திய விட்டார் என்ற குற்றச்சாட்டை முன் வைத்தார்?" என்ற கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு, "சி.வி.சண்முகம் சொன்னதில் எந்தவித சந்தேகமும் கிடையாது. கைக்கு வந்தது வாய்க்கு எட்டவில்லை என சொல்வார்கள். அதேபோல் தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு எதிரான ஒரு எண்ணம் இருந்தது. மக்கள் திமுகவை மாற்ற வேண்டும் என நினைத்தார்கள். அப்போது திமுகவுக்கு எதிரான இடத்தில் 7 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து அதிமுக இருக்கிறார்கள். ஆனால் திமுக இது போதாது என்று 24 கட்சிகளை கொண்டு கூட்டணி வலுப்படுத்தினார்கள். ஆனால் எடப்பாடி பழனிசாமி அதிமுகவுடன் கூட்டணி இருக்கும் கட்சிகளை வலுப்படுத்துவதை விட்டுவிட்டு அவர்களை வலுக்கட்டாயமாக வெளியே அனுப்பினார்.
அந்த வகையில் தான் முதலில் தேமுதிக வெளியே சென்றது. அதேசமயம் புதிய தமிழகம் கட்சி கடைசி நிமிடம் வரை தமிழ்நாட்டில் மாற்றம் கொண்டு வர வேண்டும். அதனால் கூட்டணியை வலுப்படுத்த வேண்டும் என முயற்சி எடுத்தது. எனினும் எடப்பாடி பழனிசாமி எங்களையும் உதாசீனப்படுத்தி விட்டார். பொதுவெளியில் எங்களை சிறுமைப்படுத்தும் வகையில் பேசினார்.
கூட்டணியில் இருந்த பாஜக போன்ற காட்சிகளுக்கு அவர்கள் தோற்றுப் போவார்கள் என்று தெரிந்து தொகுதிகளை ஒதுக்கினார். தன்னை நம்பி வருபவர்களும் வாழ வேண்டும், தானும் வாழ வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் கூட்டணி கட்சிகளை அனுசரிக்காமல் சென்றது மக்கள் மத்தியில் அதிமுக தேறாது என்ற எண்ணத்தை ஏற்படுத்தி விட்டது.
இதனால் திமுகவுக்கு மாற்று யார் என மக்கள் தேடும்போது புதிதாக வந்த தமிழக வெற்றிக் கழகம் சாய்ஸ் ஆக அமைந்தது. 15 சதவீதம் வாக்கு வங்கி வைத்திருந்த தமிழக கட்சி கழகம் 35 சதவீதம் வாங்குவதற்கு எடப்பாடி பழனிசாமி தான் காரணம்.
மத்தியில் ஆளும் பாஜகவின் ஆதரவு இருந்தும் இன்றைக்கு 47 இடங்களில் மட்டுமே அதிமுக வென்றிருப்பது எடப்பாடி பழனிசாமியின் சுயநலத்தின் வெளிப்பாடு என்று சொல்லலாம். பிரதமர் மோடி மூன்று முறை தமிழ்நாட்டின் வந்து பரப்புரை மேற்கொண்ட பிறகும் அதனை பயன்படுத்தாமல் விட்டுவிட்டார். கூட்டணிக்கு கதவை தட்டி அவர்களை உதாசீனப்படுத்தியது தான் அக்கட்சி படுதோல்வி அடைந்ததற்கான காரணம் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது. அனைத்து சமுதாய மக்களுக்கும் எதிரியாக எடப்பாடி பழனிசாமி மாறிவிட்டார்" என டாக்டர் கிருஷ்ணசாமி விமர்சித்துள்ளார்.
