ஆளுநர் மாளிகையில் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிக்கப்பட்ட விவகாரத்திற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆளுநர் மாளிகையில் திருவள்ளுவர் தின விழா
திருவள்ளுவர் திருநாள் கழகம் சார்பில் சென்னை கிண்டியில் உள்ள லோக் பவனில் பாரதியார் மண்டபத்தில் நேற்று வைகாசி அனுஷம் வள்ளுவர் திருநாள் எனப்படும் திருவள்ளுவர் திருநாள் விழா நடைபெற்றது. இதற்கு தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தலைமை தாங்கி உரையாற்றினார். தொடர்ந்து திருவள்ளுவரின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து பேசிய ஆளுநர் அர்லேகர், “திருவள்ளுவர் போதித்த உயரிய நெறிகளை நாள்தோறும் நமது வாழ்வில் பின்பற்ற வேண்டிய அவசியத்தைப் பற்றிப் பேசினார். திருவள்ளுவரின் போதனைகள் காலம், பண்பாடு, எல்லைகள் ஆகியவற்றை தாண்டி நிலைத்திருக்கின்றன என்றும், நல்லாட்சி, சமூக ஒற்றுமை மற்றும் ஒழுக்கப் பொறுப்புணர்வு குறித்து ஆழமான வழிகாட்டுதலை வழங்குகின்றன என்றும் ஆளுநர் தனது உரையில் குறிப்பிட்டார். இந்த நிகழ்வின்போது அங்கிருந்த பேனர், திருவுருவப்படத்தில் திருவள்ளுவருக்கு காவி உடை இடம்பெற்றிருந்தது பெரும் சர்ச்சைகளை கிளப்பியது.
திருவள்ளுவருக்கு காவி உடை - அமைச்சர் கண்டனம்
இந்த சம்பவத்தில் முதலமைச்சர் விஜய் அமைதியாக இருப்பதாகவும், ஆளுநரின் இத்தகைய செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது எனவும் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். திருவள்ளுவருக்கு காவி உடை இடம்பெற்ற சம்பவத்திற்கு அமைச்சர் அருண்ராஜ் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார். திருவள்ளுவரின் குறள் காட்டும் நல்வழியில் நடக்க முயல்வதே அவருக்கு நாம் செய்யும் உண்மையான மரியாதை. வள்ளுவரை கலங்க படுத்தாதீர்கள் என அவர் தெரிவித்திருந்தார்.
ஆளுநர் செய்வது அயோக்கியத்தனம்
இந்த நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிடம் இந்த சம்பவம் பற்றி கருத்து கேட்கப்பட்டது. அதற்கு கொந்தளித்து பேசிய அவர், “சென்னை ஆளுநர் மாளிகையில் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது. ஆளுநர் அர்லேகரின் இந்தச் செயல் மன்னிக்க முடியாத அயோக்கியத்தனம். தமிழ்நாட்டை ஆளுநர் கிள்ளுக்கீரையாக நினைத்துவிட்டாரா? முந்தைய ஆளுநரை விட இவர் படுமோசமாகச் செயல்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
