பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஒரு கூட்டம் ஆட்சிக்கு வந்துள்ளதாக தவெக அரசை சென்னை மாநகர மேயர் பிரியா ராஜன் கடுமையாக சாடியுள்ளார்.
தவெக - திமுக இடையே கடுமையான மோதல்
சென்னையில் ஜூன் 4ம் தேதி ஆர்.கே.நகரில் பள்ளி திறப்பு நாளில் நடந்த நிகழ்ச்சியில் ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ., பல்லவி மற்றும் மேயர் பிரியா ராஜன் இடையே மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டது. நிகழ்ச்சியில் குத்துவிளக்கேற்றும் வைபவத்தின்போது வேண்டுமென்று பல்லவியை பிரியா அவமரியாதை செய்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதற்கடுத்த நிகழ்ச்சியில் பல்லவி பிரியா குத்துவிளக்கேற்ற அழைத்தபோது மறுத்து விட்டார். இந்த விவகாரம் தொடர்பாக திமுக, தவெக இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.
தூய்மைப்பணியாளர்களுக்கு துணையாக திமுக
இப்படியான நிலையில் சென்னையில் தூய்மை பணியாளர்களுக்கான நலத்திட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் மேயர் பிரியா, முன்னாள் அமைச்சர்கள் சேகர் பாபு, கே.என்.நேரு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய மேயர் பிரியா தவெக பெயரை குறிப்பிடாமல் சரமாரியாக விமர்சித்தார்.
அவர் பேசுகையில், ”ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் என்றும் தூய்மைப்பணியாளர்களுடன் திமுக இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் கலைஞர் கருணாநிதி பிறந்தநாளில் உங்களுக்கென தனியாக நிகழ்ச்சி நடைபெறும். தூய்மைப் பணியாளர்கள் பணி என்பது மிகவும் கடினமானது. 24 மணி நேரமும் சென்னையை தூய்மையை வைப்பதில் அவர்களின் பங்கு மிக முக்கியமானது” என கூறினார்.
தற்குறி கூட்டம் ஆட்சிக்கு வந்துள்ளது
தொடர்ந்து பேசிய பிரியா, “இன்றைக்கு பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஒரு கூட்டம் ஆட்சிக்கு வந்துள்ளார்கள். அது யாருன்னு நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. உங்கள் அனைவருக்கும் தெரியும். தற்குறி கூட்டம், கவர்ச்சி கூட்டம் என சொல்லும் நீங்கள் எதை வைத்து வெற்றி பெற்றீர்கள். வேற என்ன களப்பணி செய்தீர்கள்?.. முதல்முறையாக ஆட்சி அமைத்துள்ளார்கள். உங்கள் தலைவர் தான் முதலமைச்சர், அவர் தலைமையில் தான் அமைச்சர்கள் இருக்கிறார்கள் என்பது தெரியாமல் என்ன நடந்தாலும் திமுக தான் காரணம் என சொல்கிறார்கள்.
ஆட்சியமைத்து இத்தனை நாட்களாகியும் ஒரு நிர்வாக திறமையும், பொறுப்புணர்வும் இல்லாமல் சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சர்களும் இருக்கிறார்கள். நாம் அனைவரும் தொலைக்காட்சியில் இதனைப் பார்த்திருப்போம். ஆனால் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்றபோது கொரோனா நேரத்தில் இருந்தோம். அப்போது நிலைமை எவ்வளவு மோசமாக இருந்ததை அறிவோம். அந்த சூழலிலும் நான் தான் இதற்கு பொறுப்பு, தீர்வு எடுக்க வேண்டிய பொறுப்பு எனக்குள்ளது என கூறி மருத்துவமனைக்கு அவர் நேரடியாக சென்றார்.
ஆனால் இன்றைக்கு தவெக ஆட்சியமைத்தும் என்ன கேட்டாலும் எங்களுக்கு தெரியாது என கூறுகிறார்கள். அப்படியென்றால் நீங்கள் ஏன் ஆட்சியில் இருக்கிறீர்கள். அதிகாரத்துக்கு வந்தும் நீங்கள் மிகவும் வீக்காக இருக்கிறீர்களா? என சரமாரியாக விமர்சித்துள்ளார்.
