தமிழ்நாட்டில் புதிதாக பொறுப்பேற்றுள்ள விஜய் தலைமையிலான தவெக அரசு ஒவ்வொரு துறையிலும் ஊழலை ஒழிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் அடுத்ததாக நகராட்சி துறையில் பட்டியல் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அதிகாரிகள் விழிபிதுங்கியுள்ளனர்.
தமிழக அமைச்சரவையில் விஜயுடன் சேர்த்து மொத்தம் 35 பேர் உள்ளனர். ஒவ்வொருவருக்கும் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் நகராட்சி நிர்வாகத்துறை முதலமைச்சர் விஜயின் கீழ் வருகிறது. அந்த நகராட்சி நிர்வாகத்தின் கீழ் மொத்தம் 25 மாநகராட்சிகள், 490 பேரூராட்சிகள், 138 நகராட்சிகள் உள்ளன. இவற்றில் அடிப்படை வசதிகளான மழை நீர் வடிகால் தொடங்கி பாதாள சாக்கடை வரை பல்வேறு பணிகள் தனியார் ஒப்பந்ததாரர்களுக்கு ஆன்லைன் டெண்டர் முறையில் வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால் அதற்காக ஒப்பந்ததாரரிடம் 10% முதல் 25 சதவீதம் வரை கமிஷன் வசூலிக்கும் நடைமுறையும் உள்ளதாக சொல்லப்படுகிறது.
எனவே புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் இந்த கமிஷன் கலாச்சாரத்தை தடுக்க மிக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சிகளில் கமிஷன் பெறக்கூடியவர்கள் யார் யார்? இன்று விவரம் சேகரிக்கப்பட்டுள்ளது. அதோடு எந்தெந்த பணிகளுக்கு எவ்வளவு கொடுக்கப்படுகிறது?.. அப்பணம் யார் யாருக்கு செல்கிறது?.. போன்ற தகவல்களை ரகசியமாக சேகரிக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளது.
பொதுவாகவே அரசு அதிகாரிகள் ஓரிடத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணி செய்யக்கூடாது என்பது விதிமுறையாகும். ஆனால் மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் பணியாற்றும் அதிகாரிகள் தாங்கள் முன்னால் பணியாற்றிய இடத்தை சுற்றி உள்ள பகுதிகளுக்கு தங்களது அதிகாரம் வாயிலாக இடம் மாறுதல் பெறுகின்றனர். அவர்களை அடையாளம் கண்டு முதற்கட்டமாக பணியிடமாற்றம் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் இதுபோன்ற கமிஷன் வாங்கும் அதிகாரிகளுக்கு உடந்தையாக இருப்பவர்கள் விவரங்களும் சேகரிக்கப்பட்டு அவர்கள் மீதும் தக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.
இதன் மூலம் தமிழகத்தில் கமிஷன் இல்லாத அனைத்து திட்டங்களையும் எளிதில் அணுகக்கூடிய ஒரு மிகப்பெரிய மாற்றத்தை விஜய் தலைமையிலான அரசு கொண்டுவர உள்ளதாக தமிழக வெற்றிக் கழகத்தின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
