தமிழ்நாட்டில் வழிபாட்டு தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகில் செயல்பட்டு வரும் 717 மதுபான சில்லறை விற்பனை கடைகளை இரண்டு வாரங்களுக்குள் மூடுமாறு முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருந்தாலும், ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையை எட்ட முடியவில்லை. இதையடுத்து காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விசிக மற்றும் ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் கூட்டணி அரசு அமைக்கப்பட்டது. அதன் பின்னர் தவெக தலைவர் ஜோசப் விஜய் முதலமைச்சராக பதவியேற்றார்.
பதவியேற்ற உடனேயே பெண்கள் பாதுகாப்பு, போதைப்பொருள் தடுப்பு, 200 யூனிட் இலவச மின்சாரம் உள்ளிட்ட பல முக்கிய கோப்புகளில் முதலமைச்சர் விஜய் கையெழுத்திட்டிருந்தார். குறிப்பாக போதைக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு புதிய அதிரடி நடவடிக்கையாக 717 மதுபான கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வழிபாட்டு தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்களிலிருந்து 500 மீட்டர் சுற்றளவில் உள்ள மதுபான சில்லறை விற்பனை கடைகள் இரண்டு வாரங்களுக்குள் மூடப்பட வேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி,
வழிபாட்டு தலங்கள் அருகில் உள்ள 276 கடைகள்,
கல்வி நிறுவனங்கள் அருகில் உள்ள 186 கடைகள்,
பேருந்து நிலையங்கள் அருகில் உள்ள 255 கடைகள்
என மொத்தம் 717 மதுபான கடைகள் மூடப்பட உள்ளன.
இந்த நடவடிக்கை பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
