தென்காசி மாவட்டம் புளியங்குடியில் உள்ள ஒரு தனியார் பள்ளி வளாகத்திற்குள் கார் மோதியதில், யுகேஜி (UKG) பயின்று வந்த 4 வயது சிறுமி சிவயாழினி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விபத்து நடந்தது எப்படி?
புளியங்குடியில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் தாளாளரைப் பார்ப்பதற்காக, ராம்காந்த் என்பவர் நேற்று மாலை தனது காரில் பள்ளி வளாகத்திற்குள் வந்துள்ளார். அங்கு காரை ஓரமாக நிறுத்துவதற்காக அவர் ரிவர்ஸ் (Reverse) எடுத்தபோது, எதிர்பாராத விதமாகச் சிறுமி சிவயாழினி மீது கார் மோதியது. இதில் பலத்த காயமடைந்த சிறுமி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
உறவினர்கள் போராட்டம்
கவனக்குறைவாகக் காரை இயக்கிச் சிறுமியின் உயிரிழப்புக்குக் காரணமான ராம்காந்தைக் கைது செய்யக் கோரியும், சிறுமியின் மரணத்திற்கு நீதி கேட்டும் உறவினர்கள் விடிய விடியப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, ராம்காந்தைப் புளியங்குடி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பள்ளி தாளாளர் மற்றும் ஆசிரியர்களிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பள்ளி நிர்வாகத்தின் மீது புகார்
பள்ளி நிர்வாகம் குழந்தைகளின் பாதுகாப்பில் அலட்சியமாக இருந்ததாகவும், சிறுமியின் உயிரிழப்பு குறித்து உடனடியாகக் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கவில்லை என்றும் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். பள்ளி நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி, சிறுமியின் உறவினர்கள் செங்கோட்டை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பள்ளிக்குச் சென்ற சிறுமி, பள்ளி நிர்வாகத்தின் கவனக்குறைவால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
