தமிழக மாநில பாடத்திட்டத்தின் கீழ் நடைபெற்ற பிளஸ் டூ பொதுத்தேர்வை எழுதிய சுமார் 8.27 லட்சம் மாணவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த தேர்வு முடிவுகள் நாளை வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பள்ளிக்கல்வித்துறை முன்னதாக மே 8ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று அறிவித்திருந்தது. ஆனால் தற்போதைய அரசியல் சூழ்நிலை மற்றும் புதிய அரசு அமைப்பதில் நீடித்து வரும் இழுபறி காரணமாக தேர்வு முடிவுகள் வெளியீடு தள்ளிப்போகும் வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொதுவாக பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு முதலமைச்சர் அல்லது பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் ஒப்புதல் அவசியமாகும். தற்போது தற்காலிக நிர்வாகம் மற்றும் ஆளுநரின் வழிகாட்டுதலின் கீழ் அரசு செயல்பட்டு வருவதால், புதிய அரசு பதவியேற்ற பிறகே தேர்வு முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என கூறப்படுகிறது.
பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தரப்பில் கிடைத்த தகவலின்படி, விடைத்தாள் திருத்தும் பணிகள் மற்றும் மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்றும் பணிகள் அனைத்தும் முழுமையாக நிறைவடைந்துள்ளன. புதிய முதலமைச்சரின் ஒப்புதல் கிடைத்தவுடன் தேர்வு முடிவுகள் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், பிளஸ் டூ தேர்வு முடிவுகள் மே மாதத்தின் மூன்றாவது அல்லது நான்காவது வாரத்தில் வெளியாகும் வாய்ப்பு அதிகம் என கூறப்படுகிறது. இருப்பினும், இன்று இரவுக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானால் மட்டுமே நாளை முடிவுகள் வெளியாகும் சூழல் உள்ளது. இல்லையெனில் முடிவுகள் தள்ளிப்போகும் என்பது உறுதியாகும் என கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், தேர்வு முடிவுகள் வெளியான பிறகே கல்லூரி மாணவர் சேர்க்கை பணிகள் தொடங்க உள்ளதால், மாணவர்கள் மற்றும் பெற்றோர் குழப்பமடையாமல் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருக்குமாறு கல்வித்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
