சிங்கப்பூரில் நடைபெற்று வரும் இந்த ஆண்டின் இரண்டாவது மிகப்பெரிய டேபிள் டென்னிஸ் தொடரான 'சிங்கப்பூர் ஸ்மாஷ்' போட்டியில், இந்தியாவின் முன்னணி நட்சத்திரங்களான மானவ் தாக்கர் மற்றும் மனுஷ் ஷா ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. ஜெர்மனியின் மார்ட்டின் அலெக்ரோ மற்றும் அட்ரியன் ராசன்ஃபோஸ் ஜோடியை 3-0 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி, இந்தத் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு இந்திய ஜோடி தகுதி பெற்றுள்ளது.
ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே ஆதிக்கம் செலுத்திய இந்திய ஜோடி, 11-8, 11-9, 11-9 என்ற கணக்கில் வெற்றியை வசப்படுத்தியது. குறிப்பாக, இரண்டாவது செட்டில் 2-5 எனப் பின்தங்கியிருந்தபோது, அதிரடியாகச் செயல்பட்டுத் தொடர்ந்து 5 புள்ளிகளைக் குவித்து ஆட்டத்தைத் தங்கள் பக்கம் திருப்பினர். மூன்றாவது செட்டில் ஆரம்பத்திலேயே 4-0 என முன்னிலை பெற்று வெற்றியை உறுதி செய்தனர். டேபிள் டென்னிஸ் உலகின் மிக உயரிய தொடராகக் கருதப்படும் WTT கிராண்ட் ஸ்மாஷ் வரலாற்றில், அரையிறுதிக்கு முன்னேறிய முதல் இந்திய இணை என்ற பெருமையை இவர்கள் பெற்றுள்ளனர்.
ஏற்கனவே ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியப் பெண்கள் ஜோடி வெண்கலம் வென்று சாதனை படைத்துள்ள நிலையில், தற்போது மானவ் - மனுஷ் ஜோடியின் இந்த வெற்றி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் டாப் வீரர்களாக இருக்கும் இவர்கள் இருவரும், இரட்டையர் பிரிவில் படைத்துள்ள இந்தச் சாதனை இந்திய விளையாட்டுத் துறைக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாகக் கருதப்படுகிறது.
