இந்திய கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் மற்றும் தொழில்முனைவோர் சானியா சந்தோக் ஆகியோரின் திருமணம் மும்பையில் உள்ள புகழ்பெற்ற 'தி செயின்ட் ரெஜிஸ்' ஹோட்டலில் நேற்று வியாழக்கிழமை மிகவும் பிரம்மாண்டமாக அரங்கேறியது. கடந்த ஆகஸ்ட் மாதம் இவர்களது நிச்சயம் நடைபெற்ற நிலையில், கிரிக்கெட் மற்றும் திரைத்துறையைச் சேர்ந்த ஜாம்பவான்கள் முன்னிலையில் இந்த மணவிழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஐசிசி தலைவர் ஜெய் ஷா, பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா, அஜித் அகர்கர், பிரக்யான் ஓஜா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இவர்களுடன் முன்னாள் கேப்டன்களான தோனி, ராகுல் திராவிட் மற்றும் ஹர்பஜன் சிங், முகமது கைஃப், யூசுப் பதான் போன்ற கிரிக்கெட் நட்சத்திரங்களும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். கலைத்துறையில் இருந்து அமிதாப் பச்சன், ஷாருக்கான், ஆமீர்கான், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்களும், பாடகர்கள் ஆஷா போஸ்லே, சோனு நிகாம் ஆகியோரும் வருகை தந்து விழாவினைச் சிறப்பித்தனர். ரிலையன்ஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானி ஆகியோரும் நேரில் வந்து புதுமணத் தம்பதியினரை வாழ்த்தி கௌரவித்தனர்.
