பிரேசில் கால்பந்து உலகின் தற்போதைய துருவ நட்சத்திரம் நெய்மார், தனது விளையாட்டுப் பயணத்திற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைப்பது குறித்த ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். சமீபகாலமாகத் தொடர்ச்சியான காயங்களால் அவதிப்பட்டு வரும் அவர், நடப்பு ஆண்டின் இறுதியில் தனது எதிர்காலத்தைப் பற்றிய இறுதி முடிவை எடுக்கப்போவதாகக் கூறி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். உலகப் புகழ்பெற்ற பார்சிலோனா மற்றும் பிஎஸ்ஜி அணிகளுக்காக விளையாடிய நெய்மார், தற்போது தனது தாய்நாட்டின் சாண்டோஸ் கிளப் அணிக்காகக் களம் கண்டு வருகிறார்.
சவாலான உலகக்கோப்பை
தனது தற்போதைய நிலை குறித்துப் பேசியுள்ள நெய்மார், "டிசம்பர் மாதம் எனது ஓய்வு குறித்து முடிவெடுப்பேன்; அதுவரை எனது முழு கவனமும் 100 சதவீத உடல் தகுதியை எட்டுவதிலேயே உள்ளது" என்று கூறியுள்ளார். 2026-ம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடர் நடைபெறும் முக்கியமான ஆண்டு என்பதால், இது தனக்கும் பிரேசில் தேசிய அணிக்கும் மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். காயங்களில் இருந்து மீண்டு வந்து, உலகக்கோப்பையில் தனது முத்திரையைப் பதிக்க வேண்டும் என்பதே அவரது தற்போதைய இலக்காக உள்ளது.
பீலேவின் சாதனையை முறியடித்த கோல் மெஷின்!
தனது 34 வயதில் ஓய்வு பற்றிப் பேசினாலும், பிரேசில் கால்பந்து வரலாற்றில் நெய்மாரின் பெயர் அழியாத இடத்தைப் பிடித்துள்ளது. 2010-ல் சர்வதேச அரங்கில் அறிமுகமான அவர், இதுவரை 79 கோல்களை அடித்து, பிரேசில் மண்ணில் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற இமாலயச் சாதனையைத் தன்வசம் வைத்துள்ளார். இதன் மூலம் மறைந்த கால்பந்து ஜாம்பவான் பீலேவின் (77 கோல்கள்) வாழ்நாள் சாதனையை முறியடித்து, பிரேசில் கால்பந்தின் புதிய மன்னனாக அவர் உருவெடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
