அமெரிக்காவில் நடைபெற்று வந்த புகழ்பெற்ற மயாமி ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், இத்தாலி நாட்டின் நட்சத்திர வீரர் ஜானிக் சின்னர் சாம்பியன் பட்டம் வென்று முத்திரை பதித்துள்ளார். விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப் போட்டியில், செக் குடியரசைச் சேர்ந்த ஜிரி லெஹெக்காவை (Jiri Lehecka) எதிர்கொண்ட சின்னர், ஆரம்பம் முதலே அதிரடி காட்டினார். ஒரு மணி நேரம் 33 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில், 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் சின்னர் அபார வெற்றி பெற்றார்.
இந்த வெற்றியின் மூலம், மயாமி ஓபன் தொடரில் சின்னர் தனது இரண்டாவது பட்டத்தைக் கைப்பற்றியுள்ளார். ஏற்கனவே 2024-ஆம் ஆண்டிலும் அவர் இப்பட்டத்தை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. ஒட்டுமொத்தமாக ஏடிபி (ATP) ஒற்றையர் பிரிவில் இது அவரது 26-ஆவது பட்டமாகும்.
வரலாற்றுச் சாதனைகள்:
சமீபத்தில் இந்தியன் வெல்ஸ் ஓபன் பட்டத்தையும் வென்றிருந்த சின்னர், தற்போது மயாமி ஓபன் பட்டத்தையும் வென்றதன் மூலம் ஒரே சீசனில் இவ்விரண்டு தொடர்களையும் வென்று ‘சன்ஷைன் டபுள்’ (Sunshine Double) எனும் அரிய சாதனையைப் படைத்துள்ளார். இந்தச் சாதனையை நிகழ்த்திய உலகின் 8-ஆவது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். மேலும், தொடர்ந்து மூன்று ஏடிபி "மாஸ்டர்ஸ் 1000" அந்தஸ்து கொண்ட தொடர்களில், ஒரு செட்டைக் கூட இழக்காமல் சாம்பியன் பட்டம் வென்ற முதல் வீரர் என்ற புதிய உலக சாதனையையும் ஜானிக் சின்னர் படைத்துள்ளார்.
