ரஞ்சி கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் புதிய அத்தியாயத்தைப் படைத்துள்ளது ஜம்மு காஷ்மீர் அணி. இதுவரை மூன்று முறை மட்டுமே காலிறுதிக்கு முன்னேறியிருந்த அந்த அணி, இம்முறை வலுவான கர்நாடக அணியை இறுதிப்போட்டியில் வீழ்த்தி முதன்முறையாகக் கோப்பையைத் தன்வசப்படுத்தியுள்ளது. ஹூப்ளியில் நடைபெற்ற இந்த இறுதி ஆட்டத்தில், எட்டு முறை சாம்பியனான கர்நாடகாவை ஜம்மு காஷ்மீர் எதிர்கொண்டது.
ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன்
முதலில் பேட்டிங் செய்த ஜம்மு காஷ்மீர் அணி, ஷுபம் பண்டிரின் சிறப்பான சதத்தால் (121 ரன்கள்) முதல் இன்னிங்ஸில் 584 ரன்களைக் குவித்தது. இதைத் தொடர்ந்து கர்நாடகா 293 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 291 ரன்கள் முன்னிலை பெற்றிருந்த ஜம்மு காஷ்மீர், இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட் இழப்புக்கு 342 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் முடிவுக்கு வந்தது. முதல் இன்னிங்ஸ் முன்னிலை அடிப்படையில் ஜம்மு காஷ்மீர் சாம்பியனாக அறிவிக்கப்பட்டது. சதமடித்த ஷுபம் பண்டிர் ஆட்ட நாயகனாகவும், இந்தத் தொடரில் 60 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய அகிப் நபி தொடர் நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்திய கிரிக்கெட்டில் புதிய மைல்கல்
விதர்பா மற்றும் மத்திய பிரதேசம் அணிகளின் வரிசையில் இப்போது ஜம்மு காஷ்மீரும் இணைந்து, ரஞ்சி கோப்பை வென்ற 19-வது அணியாகச் சாதனை படைத்துள்ளது. இந்த வெற்றி, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கிரிக்கெட் வளர்ச்சி அடைந்து வருவதை உணர்த்துகிறது.
