ஜூனியர் கிராண்ட் ஸ்லாம் தொடருக்கு அடுத்தபடியாக உயர்ந்த தரத்தில் நடத்தப்படும் இந்த ஐடிஎப் ஜூனியர் 300 தொடர் தற்போது பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வருகிறது. உலகின் முன்னணி ஜூனியர் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கும் இந்த தொடரில், இந்தியாவின் 16 வயதுடைய மாயா, தனது திறமையை வெளிப்படுத்தி கவனம் ஈர்த்துள்ளார்.
ஜூனியர் உலக தரவரிசையில் 47வது இடத்தில் உள்ள மாயா, அரையிறுதிப் போட்டியில் நெஹிரா சனோனை (பிரான்ஸ்) எதிர்கொண்டார். அந்தப் போட்டியில் மாயா 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, முதன்முறையாக ஐடிஎப் ஜூனியர் 300 இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார் .
இறுதிப்போட்டியில், இன்று அவர் பாவோலா பினோராவை (ஸ்பெயின், 15 வயது) சந்திக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக, இந்த ஐடிஎப் ஜூனியர் 300 தொடரில் இந்தியாவிலிருந்து 2015ஆம் ஆண்டு கர்மன் கவுர் இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்தார். அதன்பிறகு 11 ஆண்டுகளுக்கு பின் இந்த சாதனையை நிகழ்த்தும் முதல் இந்திய பெண் வீராங்கனை என்ற பெருமையை மாயா பெற்றுள்ளார். இந்த சாதனை, இந்திய ஜூனியர் டென்னிஸ் அரங்கில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
