அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐசிசி டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், நியூஸிலாந்து அணியை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்ற முதல் அணி என்ற உலக சாதனையையும், கோப்பையைத் தக்கவைத்துக்கொண்ட முதல் அணி என்ற பெருமையையும் இந்தியா பெற்றுள்ளது. இதற்கு முன்பு 2007 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில் இந்தியா மகுடம் சூடியிருந்தது குறிப்பிடத்தக்கது. சொந்த மண்ணில் உலகக் கோப்பையை வென்று வரலாற்றுச் சாதனை படைத்த இந்திய அணிக்கு சுமார் 27.48 கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. இறுதிப் போட்டியில் பந்துவீச்சில் மிரட்டிய பும்ரா ஆட்டநாயகனாகவும், தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடிய சஞ்சு சாம்சன் தொடர் நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
கடந்த 2023-ஆம் ஆண்டு இதே மைதானத்தில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் அடைந்த தோல்விக்கு, அதே மைதானத்தில் தற்போது கோப்பையை வென்று இந்திய அணி பதிலடி கொடுத்துள்ளது. நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் வெறும் 7.2 ஓவர்களிலேயே 100 ரன்களைக் கடந்து, டி20 உலகக் கோப்பை நாக்-அவுட் சுற்றில் அதிவேகமாக சதம் அடித்த அணி என்ற புதிய சாதனையையும் இந்தியா படைத்தது. வெற்றி குறித்துப் பேசிய வீரர் திலக் வர்மா, கடந்த ஒன்றரை ஆண்டு கால உழைப்பிற்குப் பலன் கிடைத்துள்ளதாகவும், வீரர்களின் ஒருங்கிணைந்த செயல்பாடும் அபாரமான ஃபீல்டிங்குமே இந்த வெற்றிக்குக் காரணம் என்றும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். கோடிக்கணக்கான இந்திய ரசிகர்களின் நீண்ட காலக் கனவு நனவான நிலையில், நாடு முழுவதும் வெற்றிக் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன.
