வழக்கமாக புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்காக போட்டியிடும் சிஎஸ்கே, இம்முறை ஆறு போட்டிகளில் இரண்டு வெற்றிகள் மட்டுமே பெற்று ஏழாவது இடத்தில் தத்தளித்து வருகிறது.
அணியின் செயல்பாடு பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலும் சீராக இல்லாததால், ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றம் நிலவுகிறது. இதற்கிடையில், அணியில் தொடர்ந்து ஏற்பட்டுவரும் காயங்கள் சிஎஸ்கேவின் நிலையை மேலும் சிக்கலாக்கியுள்ளது.
நம்பிக்கைக்குரிய இளம் வீரரான ஆயுஷ் மாத்ராவே காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளார். அதேபோல் ஆஸ்திரேலிய பவுலரான நாதன் எல்லிஸ் காயத்தால் முழு தொடரையும் தவறவிட்டார். அணியின் கேப்டன் MS தோனி கணுக்கால் காயம் காரணமாக குறைந்தது இரண்டு வாரங்களுக்கு வெளியேறியுள்ளார்.
மேலும் டெவால்டு பிரேவிஸ் முதல் மூன்று போட்டிகளில் காயம் காரணமாக விளையாடவில்லை. கலீல் அஹ்மத் காயம் காரணமாக அணியில் இருந்து வெளியேறியுள்ளார். இந்த தொடர்ச்சியான காயங்கள் அணியின் சமநிலையை பாதித்துள்ளன.
இந்நிலையில், நாதன் எல்லிஸ்க்கு மாற்றாக ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஸ்பென்சர் ஜான்சன் சிஎஸ்கே அணியில் இணைக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை சிஎஸ்கே நிர்வாகம் தனது சமூக வலைதளங்களில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
ஸ்பென்சர் ஜான்சன் இதற்கு முன்பு ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டான்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்காக விளையாடிய அனுபவம் கொண்டவர்.
முக்கியமாக, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான அடுத்த போட்டியில் ஜான்சன் இடம் பெற வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காயங்களால் சிக்கியுள்ள சிஎஸ்கே அணிக்கு ஸ்பென்சர் ஜான்சன் புதிய உற்சாகத்தை வழங்குவாரா? அணியை மீண்டும் வெற்றிப் பாதைக்கு கொண்டு செல்வாரா? என்பதை அறிய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
