டி20 உலகக் கோப்பை 2026 தொடரில் நியூஸிலாந்து அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் 131 கோடி ரூபாயைப் பரிசுத் தொகையாக அறிவித்துள்ளது. கடந்த 8-ம் தேதி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் டி20 உலகக் கோப்பையை மூன்று முறை வென்ற முதல் அணி, கோப்பையைத் தக்கவைத்த முதல் அணி மற்றும் சொந்த மண்ணில் பட்டம் வென்ற முதல் அணி எனப் பல்வேறு வரலாற்றுச் சாதனைகளை இந்தியா படைத்துள்ளது. இந்தியாவின் இந்த மகத்தான வெற்றியைப் பாராட்டியுள்ள பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா, இந்திய அணி டி20 கிரிக்கெட்டில் மிகவும் வெற்றிகரமான அணி என்பதை மீண்டும் நிரூபித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த 131 கோடி ரூபாய் பரிசுத் தொகையில் உலகக் கோப்பை வென்ற அணியில் இடம்பெற்ற 15 வீரர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 6 கோடி ரூபாய் வழங்கப்பட உள்ளது. மீதமுள்ள 41 கோடி ரூபாய் தலைமைப் பயிற்சியாளர் உள்ளிட்ட பயிற்சியாளர் குழுவினர் மற்றும் அணியின் இதர தொழில்நுட்பக் குழுவினருக்குப் பிரித்து வழங்கப்படும். முன்னதாக பிசிசிஐ தலைவர் மிதுன் மனாஸ் இந்திய அணிக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார். கடந்த 2024-ம் ஆண்டு ரோஹித் சர்மா தலைமையில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றபோது 125 கோடி ரூபாய் பரிசு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அப்போது ஒவ்வொரு வீரருக்கும் 5 கோடி ரூபாய் வழங்கப்பட்ட நிலையில், இந்த முறை பரிசுத் தொகை உயர்த்தப்பட்டுள்ளது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
