சீனாவின் நிங்போ நகரில் 43-வது ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 12-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்தத் தொடரில், இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் இரண்டாவது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி. சிந்து, சீனாவின் வாங் லீ-யை எதிர்கொண்டார். ஆட்டத்தின் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய வாங் லீ, 21-18, 21-8 என்ற நேர் செட் கணக்கில் சிந்துவை வீழ்த்தினார். இதன் மூலம் பி.வி. சிந்து இரண்டாவது சுற்றிலேயே தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறினார்.
அதேசமயம், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இளம் இந்திய வீரர் ஆயுஷ் ஷெட்டி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். இரண்டாவது சுற்றில் தைவானின் சி யூ ஜென் உடன் மோதிய அவர், ஆரம்பம் முதலே சிறப்பான அதிரடியைக் கையாண்டு 21-16, 21-12 என்ற நேர் செட் கணக்கில் வெற்றியை வசப்படுத்தினார். இந்த அதிரடி வெற்றியின் மூலம் ஆயுஷ் ஷெட்டி காலிறுதிக்கு முன்னேறியதுடன், இத்தொடரில் இந்தியாவின் பதக்க நம்பிக்கையைத் தொடர்ந்து உயிர்ப்புடன் வைத்துள்ளார்.
