டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணிக்கு துவக்க வீரராக களமிறங்கிய அபிஷேக் சர்மா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு வலுவான தொடக்கத்தை வழங்கினார். அவருடன் இணைந்த ட்ராவிஸ் ஹெட் 26 பந்துகளில் 37 ரன்கள் எடுத்தார்.
அடுத்ததாக களமிறங்கிய இஷான் கிஷன் 13 பந்துகளில் 25 ரன்களும், ஹெய்ன்ரிச் 13 பந்துகளில் 37 ரன்களும் சேர்த்து வேகமாக ரன்களை குவித்தனர். சிறப்பாக விளையாடிய அபிஷேக் சர்மா 68 பந்துகளில் 135 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 242 ரன்கள் என்ற பெரிய ஸ்கோரை பதிவு செய்தது.
242 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி அணிக்கு துவக்கம் சுமாராகவே அமைந்தது. பதும் நிசாங்கா 8 ரன்களில் அவுட்டானார். அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த நிலையில், இறுதியில் டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் ஹைதராபாத் அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பந்து வீச்சில் ஹைதராபாத் தரப்பில் இஷான் மலிங்கா 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். ஹர்ஷ் தூபே 3 விக்கெட்டுகள் எடுத்தார். மேலும் தில்ஷான் மதுஷங்க மற்றும் சாகிப் ஹுசைன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இன்றைய போட்டி: லக்னோ – ராஜஸ்தான் மோதல்
இதனைத் தொடர்ந்து, இன்று நடைபெறும் 32-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. லக்னோவில் நடைபெறும் இந்த ஆட்டம் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
இரு அணிகளும் சமீபத்திய போட்டிகளில் தடுமாறிய நிலையில், வெற்றி பாதைக்கு திரும்பும் நோக்கில் களம் இறங்குகின்றன. இதுவரை இரு அணிகளும் 6 முறை நேருக்கு நேர் மோதியுள்ள நிலையில், அதில் 4 முறை ராஜஸ்தான் அணியும், 2 முறை லக்னோ அணியும் வெற்றி பெற்றுள்ளன. எனவே இன்றைய ஆட்டம் விறுவிறுப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
