நாடாளுமன்ற மக்களவையில் மகளிர் இடஒதுக்கீடு தொடர்பான முக்கிய மசோதாக்கள் நேற்று நிறைவேற்றப்படாமல் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு 8.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார். பெண்களுக்கான இடஒதுக்கீட்டை உறுதி செய்யும் வகையில் கூட்டப்பட்ட சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில், 131-வது அரசியலமைப்புச் சட்டத் திருத்த மசோதா உள்ளிட்ட மூன்று முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில் அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தை நிறைவேற்ற மக்களவையில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு கட்டாயம் தேவை என்ற சூழலில் நேற்று வாக்கெடுப்பு நடைபெற்றது.
வாக்கெடுப்பு விவரம் மற்றும் மசோதாக்கள் வாபஸ்
மொத்தம் உள்ள உறுப்பினர்களில் 528 பேர் இந்த வாக்கெடுப்பில் பங்கேற்றனர். மசோதா வெற்றி பெற 352 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்பட்ட நிலையில், ஆதரவாக 298 வாக்குகள் மட்டுமே பதிவாகின. அதேநேரம், 230 உறுப்பினர்கள் மசோதாவிற்கு எதிராக வாக்களித்ததால், மகளிர் இடஒதுக்கீடு மசோதா அதிகாரப்பூர்வமாகத் தோல்வியடைந்தது. அரசியலமைப்புச் சட்டத் திருத்த மசோதா தோல்வியைத் தழுவிய காரணத்தால், அதனுடன் தொடர்புடைய தொகுதி மறுவரையறை மற்றும் யூனியன் பிரதேச சட்டத் திருத்த மசோதாக்கள் ஆகிய மற்ற இரண்டு மசோதாக்களும் அவையிலிருந்து திரும்பப் பெறப்பட்டன. இந்த பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில், பிரதமர் மோடி இன்று இரவு நிகழ்த்த உள்ள உரை மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
