திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினரும், பாஜக ஆந்திர மாநில செய்தித் தொடர்பாளருமான பானு பிரகாஷ் ரெட்டி, இந்து தெய்வங்களை அவமதிப்பவர்கள் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். சமீபத்தில் ராமர் மற்றும் லட்சுமணர் குறித்து அவதூறாகப் பேசியதாகக் கூறி, நடிகர் பிரகாஷ்ராஜ் மீது ரூ.100 கோடி மதிப்பிலான மான நஷ்டஈடு வழக்கினை அவர் தொடர்ந்துள்ளார்.
சனாதன தர்மம் மற்றும் கோயில் நிர்வாகம் குறித்த நிலைப்பாடு
இது தொடர்பாக ஆந்திர மாநில டிஜிபியிடம் புகார் அளித்துள்ள பானு பிரகாஷ் ரெட்டி, இந்து கலாச்சாரம் மற்றும் கடவுள்களைச் சமூக வலைதளங்களில் கேலி செய்வதைச் சில நபர்கள் வாடிக்கையாகக் கொண்டுள்ளதாகக் குற்றம் சாட்டினார். இனி இத்தகையச் செயல்களைப் பொறுத்துக்கொள்ள முடியாது என்றும், சனாதன தர்மத்தைத் தரக்குறைவாகப் பேசுபவர்கள் யாராக இருந்தாலும் வேடிக்கை பார்க்க மாட்டோம் என்றும் அவர் எச்சரித்துள்ளார். மேலும், கோயில்கள் என்பது மதச்சார்பற்ற இடங்கள் அல்ல, அவை இந்துக்களுக்கு மட்டுமே உரித்தானவை என்று குறிப்பிட்ட அவர், கோயில் பணிகளிலும் வியாபாரங்களிலும் இந்துக்கள் மட்டுமே ஈடுபட வேண்டும் எனத் தனது கருத்தை முன்வைத்தார். ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர் கோயில் உள்ளிட்ட இடங்களில் மாற்று மதத்தினர் பணியாற்றுவது குறித்து ஆந்திர கூட்டணி அரசு உரிய முடிவு எடுக்கும் என்றும், மத்திய பாஜக அரசின் கீழ் இந்து ஆலயங்களுக்கும் கலாச்சாரத்திற்கும் முழு பாதுகாப்பு இருப்பதாகவும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
