பீகார் முதல்வர் நிதிஷ் குமார் திடீரென தனது முதலமைச்சர் பதவியைத் துறந்து, பாஜக ஆதரவுடன் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட மனுத்தாக்கல் செய்துள்ள சம்பவம் அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்துப் பேசிய ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் தேஜஸ்வி யாதவ், நிதிஷ் குமாரை பாஜகவினர் திட்டமிட்டு கடத்திச் சென்றுவிட்டதாகவும், பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை முதலமைச்சராக நீடிக்க விடாமல் பாஜக சதி செய்துவிட்டதாகவும் கடுமையாகச் சாடியுள்ளார்.
மகாராஷ்டிராவில் அரங்கேறிய அரசியல் மாற்றத்தின் அடுத்த கட்டமாகவே பீகாரில் இந்த அதிகார மாற்றம் நடந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், நிதிஷ் குமாரை அலங்கரிக்கப்பட்ட மணமகனைப் போலக் குதிரையில் ஏற்றிவிட்டு, தற்போது திருமணச் சடங்குகளை வேறொருவருக்கு பாஜக நடத்தி வருவதாக உருவகப்படுத்திப் பேசினார். பாஜகவிற்குத் தேவைப்படுவது ரப்பர் ஸ்டாம்ப் முதலவர் மட்டுமே என்றும், நிதிஷ் குமார் மீதும் அவரது ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் அழிவு குறித்தும் தாம் அனுதாபம் கொள்வதாகவும் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, நிதிஷ் குமார் தனது சமூக வலைதளப் பதிவில், கடந்த இருபது ஆண்டுகளாகத் தமக்கு ஆதரவளித்த பீகார் மக்களுக்கு நன்றி தெரிவித்ததுடன், சட்டமன்றத்தின் இரு அவைகளிலும் நாடாளுமன்றத்திலும் உறுப்பினராக வேண்டும் என்ற தனது நீண்ட கால விருப்பத்தின் காரணமாகவே மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடுவதாக விளக்கமளித்திருந்தார்.
பீகார் மாநிலத்தின் வளர்ச்சிப் பணிகளில் தனது பங்களிப்பு தொடரும் என்றும், அமையவுள்ள புதிய அரசுக்குத் தனது முழு வழிகாட்டுதல் இருக்கும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார். பீகார் அரசியலில் ஏற்பட்டுள்ள இந்தத் திடீர் திருப்பம் மக்கள் விருப்பத்திற்கு எதிரானது என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
