ரயில்வே பாதுகாப்பு படை (RPF) அதிகாரிகள் மேற்கொண்ட கண்காணிப்பில், கடந்த ஜனவரி முதல் டிசம்பர் மாதம் வரை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில், மேலும் எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் புகைபிடித்த 219 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இவர்களிடமிருந்து மொத்தம் ரூ.43,800 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
ரயில்வே சட்டம் 1989ன் பிரிவு 167ன் படி, ரயில்வே வளாகங்களில் புகைபிடிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். இதனை மீறுபவர்களுக்கு ரூ.200 முதல் ரூ.500 வரை அபராதம் அல்லது அதிகபட்சம் 6 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிறிய தவறும் பெரிய விபத்துகளுக்கு வழிவகுக்கக்கூடும் என்பதால், ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் புகைபிடிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என அதிகாரிகள் பயணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர். இதுகுறித்து தொடர்ந்து விழிப்புணர்வு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும், ரயில்களில் புகைபிடிப்பவர்கள் குறித்து புகார் அளிக்க பயணிகள் 139 அல்லது 1512 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம் என்றும் ரயில்வே பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.
