ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியைச் சேர்ந்த 7 வயது சிறுவன் இஷான் சிங், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடைப்பட்ட ஆபத்தான பாக் ஜலசந்தி கடல் பகுதியை நீந்திக் கடந்து புதிய உலக சாதனை படைத்துள்ளார். இலங்கையின் தலைமன்னாரில் இருந்து இந்தியாவின் தனுஷ்கோடி வரை உள்ள சுமார் 29 கிலோமீட்டர் தூரத்தை, வெறும் 9 மணி நேரம் 50 நிமிடங்களில் நீந்திக் கடந்து இச்சிறுவன் வரலாறு படைத்துள்ளார். கடந்த ஏப்ரல் 30, 2026 அன்று நிகழ்த்தப்பட்ட இந்தச் சாதனையின் மூலம், உலகிலேயே மிகக் குறைந்த வயதில் இந்தப் பாதையைக் கடந்த வீரர் என்ற பெருமையை இஷான் பெற்றுள்ளார். இதற்காக யுனிவர்சல் ரெக்கார்ட்ஸ் ஃபோரம் (URF) அவருக்கு 'மிக இளம் வயது மற்றும் அதிவேக பாக் ஜலசந்தி நீச்சல் வீரர்' என்ற உலக சாதனைச் சான்றிதழை வழங்கியுள்ளது.
கடுமையான பயிற்சியும் பள்ளியின் பாராட்டும்
இந்த இமாலய இலக்கை அடைய, ராஞ்சியில் உள்ள துருவா அணையில் தினமும் 4 முதல் 5 மணிநேரம் இஷான் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். பயிற்சியாளர்கள் அமன் குமார் ஜெய்ஸ்வால் மற்றும் பஜ்ரங் குமார் ஆகியோரின் வழிகாட்டுதலில் அவர் மேற்கொண்ட கடுமையான ஒழுக்கம் மற்றும் மனஉறுதியே இந்த வெற்றிக்குக் காரணமாக அமைந்தது. ராஞ்சி டிஏவி ஷியாமலி பள்ளியில் மூன்றாம் வகுப்பு பயிலும் இஷாங்கைப் பாராட்டிய பள்ளியின் முதல்வர், இச்சிறுவனின் தைரியம் பள்ளிக்கும் நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளதாகவும், மற்ற மாணவர்களுக்கு இது ஒரு சிறந்த முன்மாதிரியாக அமையும் என்றும் வாழ்த்தினார்.
